Description
‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரைக்கும் லாபம்’ என்ற பழமொழி இப்போது மருத்துவத் துறைக்கும் பொருந்திப்போகிறது.
மருத்துவம் என்பது எப்போது சேவை என்ற உன்னத நிலையில் இருந்து வர்த்தகம் என்ற லாபநோக்குக்கு மாறியதோ, அன்றிலிருந்தே பொதுமக்களின் ஆரோக்கியம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிட்டது. தலைவலி என்று போவோருக்கும் முழுநீள பரிசோதனைப் பட்டியல் கையில் திணிக்கப்படும் அவலம் எல்லோரும் அறிந்ததுதான்! சாதாரண உடல்நலக் குறைவு என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகுபவர்கள்கூட மொத்த சொத்தையும் இழந்து கூடவே உயிரையும் இழக்கும் பரிதாபமும் பல்வேறு இடங்களில் அரங்கேறுகிறது.
குடும்ப மருத்துவர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் விலகி, இன்று டாக்டர்கள் சொல்வதற்கு ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்பது என்பதே ஒரு மரபுபோல ஆகிவிட்டது! மருத்துவத் துறை மீதும், மருத்துவர்கள் மீதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கேள்விக்குறி ஆகிவிட்டதன் விளைவு இது!
இப்போதும் மருத்துவத் தொழில்மீது பக்தி கொண்ட, மக்களின் அறியாமையில் காசு பார்க்கக்கூடாது என்ற லட்சியம் கொண்ட எத்தனையோ உன்னத மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேர்மையான & திறமையான மருத்துவ நிபுணர்களைத் தேடித் தேடி, அவர்களிடமிருந்து பயனுள்ள தகவல்களை கேட்டுப் பெற்று பிரசுரித்து வருகிறது ‘மல்லிகை மகள்’ மாத இதழ். அதில் வெளியான சில பகுதிகளிலிருந்துதான் முக்கியமான குறிப்புகளை தேர்ந்தெடுத்து தனிப் புத்தகமாக தொகுத்துத் தந்திருக்கிறோம்.
இந்நூலில் ஆலோசனை தந்திருப்பவர்கள் அந்தந்த பிரிவுகளில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த மூத்த மருத்துவர்கள் என்பதும், மக்கள் சேவையில் புகழ்பெற்று விளங்குபவர்கள் என்பதும் இந்த குறிப்புகளின் நம்பகத் தன்மைக்கு பெரும் சான்றாக விளங்கும்.
இந்த நூல் உங்கள் வீட்டிலேயே ஒரு மருத்துவர் இருப்பதுபோன்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும் என்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.