Description
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று சமூக ஊடகங்களால் தகவல்கள் நிரம்பி வழியும் காலம் இது. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ.. தேடுகிறீர்களோ இல்லையோ.. உங்கள் பார்வைக்கு அவை தானாகவே வந்து குவிகின்றன; கவனத்தைக் கவர்கின்றன.
பயனுள்ள சரியான தகவல்கள் நம்மை நாடி வருவது வரம் எனில், நம் கவனத்தை ஈர்த்து சாய்க்கப் பார்க்கும் நம்பகத்தன்மையற்ற தகவல்கள் மிகப்பெரும் சாபமாகவும் அமையக்கூடும். மருத்துவம் என்பதே விலை உயர்ந்த விஷயமாகிவிட்டதால், ‘வருமுன் காக்க’ என்றும், ‘எளிய வைத்தியம்’ என்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களே இந்தத் தகவல் பரிமாற்றங்களில் அதிகம் இடம் பிடிக்கின்றன. இந்நிலையில்தான் நம்பகமான எளிய வைத்திய தகவல்களை தரும் நோக்கில் ‘மல்லிகை மகள்’ இதழில் ‘அஞ்சறைப் பெட்டியில் ஆரோக்கியம்’ என்னும் தொடர் தொடங்கப்பட்டது. மூத்த சித்த மருத்துவரான டாக்டர் செல்வசண்முகம் தனது நீண்ட சிகிச்சை அனுபவத்தில் பயன்தந்த பல்வேறு வைத்தியக் குறிப்புகளை அதில் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியே ‘வீட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் இன்று தனி நூலாக மலர்ந்திருக்கிறது.
வீட்டில் நம் அடுக்களையில் உள்ள உணவுப் பொருட்களை வைத்தே செய்யப்படுவதுதான் வீட்டு மருத்துவம். செயற்கை வேதிப் பொருட்கள் எவையும் சேர்க்காததால், பக்கவிளைவுகள் என்னும் பயத்துக்கே இடமில்லை. இதைப் பின்பற்ற எந்த மருத்துவரின் அறிவுரையும் தேவையில்லை என்பது இன்னொரு சிறப்பு. இதுபோன்ற வீட்டு மருத்துவமுறைகள் எல்லாமே காலம் காலமாகப் பழக்கத்தில் இருந்தவைதான். மக்கள் மறந்துவரும் நிலையில், மீண்டும் அவற்றை நினைவுபடுத்தி ஆரோக்கியம் காக்கவே இந்த நூல்!
எளிய வைத்திய முறைகளை பயன்படுத்தி சில நோய்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதன் மூலம், அவை பெரிய நோய்களாக விஸ்வரூபம் எடுக்கும் ஆபத்தை தடுப்பதற்கும் இந்த நூல் நிச்சயம் உதவியாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.